
தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் இரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளையும் வேறு திகதிகளுக்கு மாற்றக்கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் டி.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 11 ஆம் திகதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
தேர்தல் நேரத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை வேறு திபதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்திக் கொள்ள ஐபிஎல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் இரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் பொலிஸாருக்கு ஏற்படும்.
ஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் இரசிகர்கள் என்ற போர்வையில் மைதானத்துக்குள் தங்களது சின்னத்துடன் கட்சியினர் பிரச்சாரம் செய்வர் என்பதால் தேவையற்ற சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
எனவே, ஏப்ரல் 04 மற்றும் ஏப்ரல் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு நடத்திக் கொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டாளர்களை அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
ஒருவேளை கிரிக்கெட் போட்டிகளுக்கான திகதிகளை மாற்ற முடியாது எனக் கூறினால் தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமுல்படுத்தவும், அரசியல் கட்சிகளின் சின்னங்கள், கொடிகள் என எதையும் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காட்சிப்படுத்த அனுமதிக்கக் கூடாது என ஐபிஎல் நிர்வாத்துக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
