ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.

அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு , இன்று பிற்பகல் நீதிவான் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையின்படி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

வழக்கு விசாரணையின் சமர்ப்பிப்புகளுக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு முன்னாள் ஜனாதிபதி, அரச தலைவராகப் பணியாற்றியபோது, ​​பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குச் செல்ல அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பானது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) முன்னிலையில் முன்னதாக வாக்குமூலம் அளிக்க ஆஜரான பின்னர், 2025 ஒகஸ்ட் 22 அன்று ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதியின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டு, வழக்கை இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This