தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  நேற்று செவ்வாய்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரின் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டிலில் குறித்த சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறுமி தொட்டிலில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சிறுமி தொட்டிலில் தொங்கிகொண்டிருந்ததை கண்ட சிறுமியின் சகோதரன் அயலவர்களை அழைத்து கூறியதை அடுத்து சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றனர்.

எனினும், குறித்த சிறுமி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13 வயதுடை மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது .

குறித்த சிறுமி பொகவானை தமிழ் வித்தியாலயத்தில் ஏழாம் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிவித்தனர்.

ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபுது ஜிந்தக்க தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சிறுமியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This