யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை

நோயாளர் என்ற ரீதியில் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குகள் பிரவேசிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அனுமதியில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகியோருக்கு எதிரான யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என அர்ச்சுனாவிடம் அறிவித்துள்ளது.

அத்துடன், உரிய அனுமதியின்றி வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முற்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மேலும், இவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Share This