
இலங்கையைத் தாக்கப் போகும் மற்றுமொரு புயல்
வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மழைவீழ்ச்சி கடுமையானதாக இல்லாவிட்டாலும், ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் ஆபத்தை தூண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகங்களின் நகர்வுகள் புயலாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்து, தீவிர மழை பெய்யக்கூடும் என்றும் பிபிசி தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத்திடம் கருத்து கேட்டபோது,
எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களை நிர்வகிப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களமும், மகாவலி அபிவிருத்தி சபையும் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் கட்டவிழ்த்து விடப்பட்ட கனமழையைத் தொடர்ந்து பெரும்பாலான முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மீண்டும் 150-200 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்தால் அது ஆபத்தானது. அதிகப்படியான நீரை வெளியேற்றவும் நிலைமையை நிர்வகிக்கவும் நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
நீர்ப்பாசன முறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கேட்டபோது, சமீபத்திய வெள்ளத்தால் சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
