பேரழிவிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் நிதியுதவி!

பேரழிவிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் நிதியுதவி!

டித்வா சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது.

இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமும் அடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இருதரப்பு கலந்துரையாடலுக்குப் பின்னர் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிற்கு முதலில் பதிலளித்த இந்தியா, நவம்பர் 28 அன்று ஆபரேஷன் சாகர்பந்துவைத் தொடங்கியது.

இந்திய மருத்துவக் குழுக்களால் சுமார் எண்பதாயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சுகாதார உதவி மற்றும் பால அமைப்பின் நவீனமயமாக்கலுக்கு இராணுவ பொறியியல் குழுக்களின் பங்களிப்பு உட்பட இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளின் தன்மையை நினைவு கூர்ந்த இந்திய வெளியுறவு அமைச்சர், 2022 ஆம் ஆண்டு பொருளாதார சரிவின் போது ஏற்பட்டதைப் போலவே இந்த பேரழிவிலும் ஆதரவு வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.

நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு இந்தியா தன்னால் முடிந்த அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அந்த அறிவிப்புக்கு ஜனாதிபதி அநுர குமாரவும், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )