ஊடகவியலாளர்களின் தொழில்முறை படிப்புகள், நலன்புரி, பிற திறன்களை மேம்படுத்த பல திட்டங்கள்

ஊடக அமைச்சின் தலைமையில் ஊடகவியலாளர்களின் தொழில்முறை படிப்புகள், நலன்புரி மற்றும் பிற திறன்களை மேம்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் பல திட்டங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுடன் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் அண்மையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொழில்முறை பத்திரிகையாளர்களைப் பாதிக்கும் தொழில்முறை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் கண்டறிவதையும், நாட்டின் ஊடகத் துறை பெருமைமிக்க தொழில்முறை பத்திரிகையாளர்களால் ஆசீர்வதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை நிறுவுதல், தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்குதல் மற்றும் ஊடகத் துறையில் சுய ஒழுங்குமுறையை நிறுவுதல் ஆகியவை குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், நிதி அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசித்து இதற்கான முறையான திட்டம் உடனடியாக தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் விபரித்தார்.