தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புனர்வுசெய்யப்பட்டு கொலை- சந்தேக நபருக்கு விளக்கமறியல்

தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புனர்வுசெய்யப்பட்டு கொலை- சந்தேக நபருக்கு விளக்கமறியல்

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதி வரை (09-01-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று (26) வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் சந்தேகநபரை கடந்த திங்கட்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 26ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்றைய தினம் (26) மீண்டும் விசாரணைக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து மாறு நாள் 16ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

குறித்த கொலை தொடர்பாக வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து குறித்த தோட்டத்தில் வேலை செய்து வந்த 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )