அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்து வருவதாக சீனா தெரிவிப்பு

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் பல அணுகுமுறைகளை பீஜிங் மதிப்பீடு செய்து வருவதாக சீனாவின் வர்த்தக அமைச்சு வெள்ளிக்கிழமை (02) தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், 145% வரையான ஒருதலைப்பட்ச கட்டணங்கள் அதற்கு ஒரு தடையாகவே உள்ளதாகவும், இது பேச்சுவார்த்தை தொடர்பான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு திறந்திருக்கும் சீனாவின் நிலைப்பாட்டை இந்த பீஜிங்கின் இந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது.
ஆனால், தேவைப்பட்டால் போராட சீனா உறுதியாக உள்ளது என்பதையும் அது வலியுறுத்துகிறது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
வரி மற்றும் வர்த்தகப் போர்கள் அமெரிக்காவால் ஒருதலைப்பட்சமாகத் தொடங்கப்பட்டன.
அமெரிக்கத் தரப்பு பேச விரும்பினால், அது அதன் நேர்மையைக் காட்ட வேண்டும்.
மேலும் தவறான நடைமுறைகளைச் சரிசெய்தல் மற்றும் ஒருதலைப்பட்சமாக வரிகளை விதிப்பதை இரத்து செய்தல் போன்ற பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் -என்று குறிப்பிட்டது.
வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து மூத்த அமெரிக்க அதிகாரிகளின் பல்வேறு அறிக்கைகளை பீஜிங் கவனத்தில் கொண்டதாக பெயர் குறிப்பிடப்படாத அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாக அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
அதேநேரத்தில், பீஜங் தரப்புடன் பேச நம்பிக்கையுடன், தொடர்புடைய தரப்பினர் மூலம் சீனத் தரப்பிற்கு தகவல்களைத் தெரிவிக்க அமெரிக்கா அண்மையில் முன்முயற்சி எடுத்துள்ளது.
ட்ரம்பின் வரி உயர்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீதான தனது சொந்த வரிகளை 125% வரை பீஜிங் உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவிற்கு மூலோபாய ரீதியாக முக்கியமான சில கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளையும் அது கடுமையாக்கியுள்ளது.
மேலும், பல்வேறு வகையான அமெரிக்க பண்ணை பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளது.