வவுனியாவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் மரணம்

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (06.10) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராசேந்திரன்குளம் பாடசாலைக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்பவரே மரணமடைந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.