
தெஹிவளையில் மஞ்சள் அனகொண்டா குட்டியை காணவில்லை!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகோண்டா குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து உள்ளூர் பெண் ஒருவர் மஞ்சள் அனகோண்டா உட்பட மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்திருந்தார்.
பின்னர் பாம்புகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்துறையினரின் காவலில் எடுக்கப்பட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி, ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட காலத்திற்குப் பிறகு பொது காட்சிக்கு வைக்கப்படும் என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குநர் கசுன் ஹேமந்த சமரசேகர சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் கனமான பாம்பு இனங்களில் மஞ்சள் அனகோண்டாவும் ஒன்று என்று அவர் கூறினார்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் காணாமல் போன இந்த மஞ்சள் அனகோண்டா கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
