ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – ட்ரம்ப் ஒப்புதல்

ஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் இந்த புதிய சட்டத்தை ஆதரித்து பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த சட்டத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரும் ஒரு புதிய கருவியாக இந்த முயற்சி இருக்கும். ட்ரம்பின் இந்த முடிவு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.
நீங்கள் ரஷ்யாவிலிருந்து பொருட்களை வாங்குகிறீர்கள், உக்ரைனுக்கு உதவவில்லை என்றால், அமெரிக்காவிற்குள் வரும் உங்கள் தயாரிப்புகளுக்கு 500% வரி விதிக்கப்படும் என்பதுதான் இந்த சட்டத்தின் அடிப்படையாகும். இந்தியாவும், சீனாவும் புதினின் கச்சா எண்ணெயில் 70% வாங்குகின்றன. அவர்கள் அவரது போர் இயந்திரத்தைத் தொடர்ந்து இயக்குகிறார்கள். ரஷ்யா மீதான இந்த தடைகள் சட்டத்திற்கு எங்களிடம் 84 ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே அந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் தகவல்களின்படி, மே 2025ல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. மே மாதத்தில் இந்தியா, ரஷ்யாவிலிருந்து 4.2 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதைபடிவ எரிபொருட்களை வாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.