அமைச்சரவை மாறுமா? சுனில் ஹந்துனெத்தி விளக்கம்

அமைச்சரவை மாறுமா? சுனில் ஹந்துனெத்தி விளக்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் கவிழும் என்ற எதிரணியின் பிரச்சாரம் நகைச்சுவைத்தமானது எனவும், அமைச்சரவை மாற்றம் நடக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கூட அரசியல் சூழ்ச்சியின் ஓர் அங்கம்தான் என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு கூட்டு பொறுப்புடன் செயற்படும் ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். அதற்கமைய நாம் கூட்டு பொறுப்புடன் செயற்பட்டுவருகின்றோம். தனிநபர் ஆதிக்கம் கிடையாது. அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவேண்டுமென்றாலும்கூட அதனையும் கூட்டு பொறுப்புடனேயே செய்வோம்.

எனினும், அமைச்சரவை மறுசீரமைப்புக்குரிய தேவைப்பாடு தற்போது எழவில்லை. அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எதிராக எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இவர்களால் முடியாது என மக்களும் கூறவில்லை. அப்படியானால் எதற்காக அமைச்சரவையை மாற்ற வேண்டும்? கடந்த காலங்களில் ஊழல்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்காக அமைச்சரவை மாற்றப்பட்டது. நாம் அவ்வாறான செயலில் ஈடுபடமாட்டோம்.

ஆகஸ்டில் அரசாங்கம் கவிழுமாம், டிசம்பரில் கவிழுமாம் என்றெல்லாம் சிலர் கூறிவருகின்றனர். கடையில் அவ்வாறு கூறுபவர்கள்தான் வீழ்ந்துவருகின்றனர். இது நகைச்சுவைத்தனமான கதையாகும்.” – என்றார்.

Share This