
ஃபத்வா காலாவதியாகிவிட்டது – ஈரான் அணு குண்டுகளை உருவாக்குமா?
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறிவந்த ஈரானின் அணுசக்தித் திட்டம் , அந்நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஒரு புதிய பாதையில் செல்கிறது என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
இரகசிய அணுசக்தித் திட்டம் சர்வதேச கவனத்திற்கு வந்தபோது, ஈரான் தனது நோக்கங்கள் அமைதியானவை என்றும், ஆயுதங்களை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் வலியுறுத்தியது.
அந்நாட்டின் அப்போதைய உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனி, இஸ்லாமியச் சட்டத்தின்படியான ஃபத்வா எனப்படும் சட்டப்பூர்வத் தீர்ப்பை வெளியிட்டு, அவற்றை தடை செய்யும் அளவுக்குச் சென்றார்.
எனினும், அயதுல்லா அலி கமேனியால் முன்னர் வெளியிடப்பட்டு, அணு ஆயுதங்களைத் தடைசெய்த மத ஆணை அல்லது ‘ஃபத்வா’ தற்போது செல்லாததாகிவிட்டது .
கடந்த மாதம் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் உச்ச தலைவர் கொல்லப்பட்ட பின்னர், ஈரானில் உள்ள கடும்போக்குப் குழுக்கள் அணு குண்டு தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அணுசக்தி ஃபத்வா காலாவதியாகிவிட்டது,” என்று பொறுப்பான அரசாட்சிக்கான குயின்சி நிறுவனத்தைச் சேர்ந்த டிரிட்டா பார்சி சிஎன்என்-னிடம் கூறினார்.
“பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளால் ஈரான் இரண்டு முறை குண்டுவீச்சுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் உயரடுக்கு மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் வியத்தகு முறையில் மாறியிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.” என்றார்.
பல ஆண்டுகளாக, முன்னாள் உச்ச தலைவர் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு அங்கீகாரம் அளிக்குமாறு எழுந்த உள் அழுத்தத்தை எதிர்த்து வந்தார்.
குறிப்பாக, 2018ஆம் ஆண்டு ஈரான் மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விலகிய பிறகு இந்த எதிர்ப்பு வலுத்தது.
அதிகரித்து வரும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விரோதப் போக்கை எதிர்கொண்ட கமேனி, அதற்குப் பதிலாக வல்லுநர்கள் “மூலோபாயப் பொறுமை” என்று அழைக்கும் தனது கோட்பாட்டையே கடைப்பிடித்தார்.
அவர் ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை சீராக முன்னேற்ற அனுமதித்தார்.
இதன்மூலம், உண்மையான குண்டு உருவாக்கும் எல்லையைத் தாண்டாமல், அந்தப் பொருளை ஆயுதத் தர நிலைகளுக்கு மேலும் மேலும் நெருக்கமாகக் கொண்டுவந்தார்.
கடந்த ஆண்டு ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய முன்னெப்போதும் இல்லாத இராணுவ நடவடிக்கையில் அந்நாட்டின் பல இராணுவ மற்றும் அணுசக்தித் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அணு குண்டு தயாரிக்கும் கோரிக்கைகள் வலுப்பெற்றன.
ஈரானின் மிக முக்கியமான மூன்று அணுசக்தித் தளங்களைத் தாக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கைகள் மீண்டும் அதிகரித்தன.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்பே, ஈரான் தனது அணுசக்தி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஈரான் தனது கொள்கையை இன்னும் பகிரங்கமாக மாற்றிக்கொள்ளவில்லை. இருப்பினும், ஈரான் 400 கிலோகிராமுக்கும் அதிகமான அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டுள்ளது.
கமேனியின் மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் ஃபத்வாவை மாற்றினால், பல அணு ஆயுதங்களைத் தயாரிக்க அந்த அளவு போதுமானதாக இருக்கும்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி ( மறைந்த தலைவரின் இரண்டாவது மகன் ), தனது தந்தையின் அணுசக்திக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றுவாரா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.
அவர் தற்போது இரகசியமாக வாழ்ந்து வருகிறார், மேலும் தனது முதல் அறிக்கையில், தன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக சூளுரைத்தார், ஆனால் அணுசக்தி திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
புதிய தலைமையின் கீழ் ஈரானின் அணுசக்திக் கொள்கை மாறுமா என்ற கேள்விக்கு பதலளித்து பேசிய, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணு ஆயுதங்கள் குறித்த புதிய தலைவரின் “சட்டரீதியான அல்லது அரசியல் நிலைப்பாடு” பற்றி தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறினார்.
“இது நமது முந்தைய கொள்கைகளிலிருந்து பெரிதாக வேறுபடாது என்பதே என் புரிதல், ஆனால் அவருடைய கருத்துக்கள் தெரியவரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பல அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான, 400 கிலோகிராமுக்கும் அதிகமான உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிடம் தற்போது கையிருப்பில் உள்ளது .
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC, தனது அணுசக்திக் கொள்கையை மாற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஈரானின் எஞ்சியிருக்கும் தலைமை, அணு ஆயுதக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அதிகரித்து வரும் உள்நாட்டுக் கோரிக்கைகளையும் சமாளித்து வருகிறது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை தனது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டு, பழிவாங்கும் குணம் கொண்ட இளைய தலைமுறைப் போராளிகளை வழிநடத்த, கடும்போக்குடைய ஓய்வுபெற்ற தளபதிகளை மீண்டும் நியமிப்பதால் இந்த அழுத்தம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு குண்டை உருவாக்க முயன்றால், சவூதி அரேபியாவும் கூடிய விரைவில் அணு ஆயுதங்களை உருவாக்கத் தூண்டப்படும் என்று சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்னதாகக் கூறியிருந்தார் .
ஈரான் ஏற்கனவே இரண்டு முறை வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதால், அது இனிமேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
தனது சொந்தப் பாதுகாப்பிற்காக ஈரான் ஒரு அணுசக்தி நாடாக மாற முற்படும் போக்கு அதிகரித்து வருவதாக சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
