யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி

யாழ்ப்பாணம் வர அச்சம் ஏன்? கோட்டாபயவிடம் நீதிமன்றம் கேள்வி

கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் வருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நியாயமான காரணங்களுடன் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று புதன் கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கோட்டாபய ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் ஊடாக நிகழ்நிலை ஊடாகத் தோன்றி சாட்சியம் அளிக்க விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பத்தை அடுத்து, நீதவான், யாழ்ப்பாணம் வருகை தருவதில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்ன? என்பதனைத் தெளிவுபடுத்தும் சத்தியக் கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2011 டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் நடத்தவிருந்த போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன், அதற்கு முதல் நாள் ஆவரங்கால் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களின் உறவினர்கள் 2012இல் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்தச் சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரிக்கும் பணி 2012 செப்டெம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆரம்பமானது.

2017ஆம் ஆண்டு இந்த வழக்கின் சாட்சியாளர்கள் பட்டியலில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்றில் தோன்றி சாட்சியமளிக்குமாறு நீதிமன்று அவருக்கு உத்தரவிட்டது.

எனினும், பாதுகாப்புக் காரணங்களால் தன்னால் யாழ்ப்பாணம் வர முடியாது என கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )