
இறுதிப் போட்டிக்குள் நுழைய போவது யார்? இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதற்கு முன் 2007, 2014, 2024 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இரு அணிகளும் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி இதே மும்பை மைதானத்தில் மோதின. இதில் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது.
தென் ஆப்பிரிக்காவிடம் 72 ஓட்டங்களால் இந்தியா அணி வீழ்ந்தது. அதற்கு பிறகு நெருக்கடியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிம்பாப்வே, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பெற்றது. லீக் ஆட்டங்களில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினார். அவர் நல்ல நிலைக்கு திரும்பியது அணிக்கு கூடுதல் பலம்.
அபிஷேக் சர்மாவின் பேட்டிங் கவலையை ஏற்படுத்துகிறது.
இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.
இங்கிலாந்து எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவது அவசியம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் ஹாரி புரூக் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். வில் ஜேக்ஸ், பெத்தல், பான்டன், பில் சால்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
லீக் சுற்றில் தடுமாறிய இங்கிலாந்து அணி அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடமுடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. இந்தியாவை போலவே இங்கிலாந்து அணியும் 6-வது முறையாக அரையிறுதியில் ஆடுகிறது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் ஏற்படாது.
