பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – தாலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் நடத்தியது.
இதற்கிடையே தெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம், பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் பலியானார்கள்.
இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் இராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் அரசாங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறியதாவது:-
பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி பாக்டிகா மாகாணத்தில் 3 இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது. பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்கள் தோகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தெளிவான மீறல் ஆகும். தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தை களைத்தடம் புரளச் செய்ய வேண்டுமென்றே பாகிஸ்தான் முயற்சித்து உள்ளது என்று தெரிவித்தது.
இதற்கிடையே பாகிஸ்தானின் அத்துமீறல் காரணமாக போர் நிறுத்தம் முறிந்து விட்டதாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தலிபான்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கத்தாரின் தோகாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது.