தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை அமைச்சர் சந்திரசேகர்

தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை அமைச்சர் சந்திரசேகர்

‘தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவோம். காணி விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22.08.2025) உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. போரால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அதனால்தான் இப்படியான பிரேரணைகள் வருகின்றன. அத்துடன், வடக்கில் புலம்பெயர்வுகளைத் தடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் யாழ்ப்பாணம் மக்கள் இல்லாத பகுதியாக மாறக்கூடும்.

வடக்கில் மிக வேமாக அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்று பிரதான தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன்பின்னர் சிறந்த தொழில் பிரதேசமாக வடக்கு மாறும். அதன்பின்னர் எமது பகுதியை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறையும். எமது மக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படும். தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வருகின்ற புலம்பெயர் தமிழர்கள் இன்று சுதந்திரமாக வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. எவ்வித பாதுகாப்பு கெடுபிடிகளும் இல்லை. இதனால் இங்கேயே இருந்துவிடலாம் என எண்ணுகின்றனர். முதலீட்டு வாய்ப்புகள் பற்றி ஆராய்கின்றனர்.

எமது ஆட்சி வந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன. தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் மறக்கவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவோம். காணிகள் விடுவிக்கப்படும் என்பது பிரதான உறுதிமொழி. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக கூடிய சீக்கிரம் விடுவிக்கப்படும்.

தையிட்டி விகாரைப் பிரச்சினையும் நிச்சயம் சுமூகமான முறையில் தீர்க்கப்படும். இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் ஆகிய பிரச்சினை பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )