‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக இணைகிறது வியட்னாம்

வியட்னாம் ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பில் பங்காளித்துவ நாடாக அதிகாரபூர்வமாக இணைவதாக பிரேசில் அரசாங்கம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்துள்ளது.
இந்தத் தகுதியைப் பெறும் பத்தாவது நாடு வியட்னாம்.
முன்னதாக, வளரும் பொருளியலைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பாக 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை இடம்பெற்றிருந்தன. பின்னர், தென்னாப்பிரிக்கா அதில் இணைந்துகொண்டது.
தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட அந்த அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், இந்தோனீசியா ஆகியவை இணைந்தன.
பெலருஸ், பொலிவியா, கஸகிஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகியவை ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பங்காளித்துவ நாடுகளாக உள்ளன.
இந்த ஆண்டு (2025) ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை பிரேசில் ஏற்றுள்ளது.
அந்தக் கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக இணைந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாட வியட்னாம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் விருப்பம் தெரிவித்திருந்தது.
வியட்னாமிய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகக் கூறிய பிரேசில், நீடித்த நிலைத்தன்மை மிக்க மேம்பாடு, ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பில் வியட்னாம் மேற்கொள்ளும் முயற்சி ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் நலன்களுடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டது.