
அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ள இந்தியா, இந்தத் தற்காலிக யுத்த நிறுத்தம் இப்பகுதியில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தது.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த மோதலை விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டுவரவும், பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையும் இராஜதந்திரமும் மிகவும் அவசியமானவை என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தியுள்ளோம். இது இப்பகுதியின் நீடித்த அமைதிக்கும், ஹொர்முஸ் நீரிணை ஊடான தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கும் உலகளாவிய வர்த்தக ஓட்டத்திற்கும் வழிவகுக்கும்.
இம்மோதல் ஏற்கனவே மக்களுக்கு அளவற்ற துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வலையமைப்புகளையும் சீர்குலைத்துள்ளது. இராஜதந்திர வழிகள் மூலமான அமைதி தீர்வு மட்டுமே இப்பகுதியில் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே சாத்தியமான வழி என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடும் ஆகும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, கப்பல் போக்குவரத்து இடையூறுகள், அதிக சரக்குக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கப்பெறும் என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
