ஐநாவின் அதிகாரிகள் அமைச்சர் சந்திரசேகருடன் சந்திப்பு – மீனவர் பிரச்சினைகள் குறித்து கலந்தாய்வு

ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் இன்று (11.03.2025) சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஐ.நாவின் திட்ட சேவைகள் பிரிவில் தெற்காசியாவுக்கு பொறுப்பாகவுள்ள முக்கிய பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர்களுக்குரிய திட்டங்கள் மற்றும் அதற்கான ஐநாவின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
அதேபோல் அபிவிருத்தி துறைகளில் ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.
நாட்டில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும் இலங்கையின் பல்வேறு திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.