டிரம்பின் வரிச் சட்டம் நிறைவேற்றம் – காத்திருக்கும் ஆபத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் வரி மற்றும் செலவு சட்டம் காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில், சட்டத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் பதிவாகின. 4 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க சுதந்திர தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு டிரம்ப், சட்டத்தில் கையெழுத்திடுவார் என்று பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார். இதன்மூலம் மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.
இந்த சட்டத்தில் இராணுவ செலவினங்களை அதிகரித்தல், புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்திற்கு நிதியளித்தல் மற்றும் வரி நிவாரணத்தை நீட்டிக்க 4.5 டிரில்லியன் டொலர்களை ஒதுக்குதல் ஆகியவை முக்கிய அம்சங்கள் அடங்கும்.
இருப்பினும், இந்த சட்டம் நாட்டின் கடனை மேலும் 3.4 டிரில்லியன் டொலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஏழைகளுக்கான உணவு உதவித் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் பெரும் நிதி குறைப்புகள் ஏற்படும். இந்த சட்டம் அமலானால் சுமார் 17 மில்லியன் மக்களின் காப்பீட்டுத் தொகையை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
சட்டம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் அவையில் பேசுகையில், “இந்த சட்டம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையை அழிக்கும். இது ஒரு அருவருப்பான மற்றும் ஆபத்தான சட்டம்” என்று கூறினார்.
இந்த சட்டத்தால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.