“ட்ரம்ப், தேசியம், குடியேற்றம் – அமெரிக்காவை மாற்றும் மூன்று கோணங்கள்”

சர்வதேச அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து உலக நாடுகள் பொருளாதார விளைவுகளை சந்திக்கின்றமையையும் அவை ஆழமானதாகவும் விரைவானதாகவும் இருப்பதை காண முடிகின்றது.
உலக அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
அதிக வர்த்தக கட்டணங்கள் முதல் கட்டுப்பாடுகளை நீக்குதல், மேற்கத்திய இராணுவ கூட்டணியான வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பில் (நேட்டோ) அமெரிக்காவின் பங்காளிகளுக்கு அதிக கோரிக்கைகள், அரசாங்க நிதி மீதான அழுத்தம், பணவீக்கம் , பொருளாதார வளர்ச்சி மற்றும் வட்டி விகிதங்கள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உணரப்படுகிறது.
குடியேற்றத்திற்கு எதிராக ட்ரம்ப் பலமுறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த பெரும்பலானோரை அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தவுள்ளதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தங்களுடைய நாட்டிற்கே அனுப்பும் நடவடிக்கையில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து கடந்த வாரம் கலிபோர்னியாவில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பிற நகரங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
“இன்று ஜனாதிபதியாக இருக்கும் ட்ரம்ப் உட்பட, பல வெள்ளையர்கள், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிவர்களே. இவ்வாறிருக்கையில் தம்மை வெளியேற்றும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது” என போராட்டக்காரர்களால் முழக்கங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
போராட்டங்கள் கைவிடப்படாது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக ட்ரம்பின் உத்தரவுக்கமைய,பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4000 பேர் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு உதவுவதற்காக சுமார் 700 கடற்படை வீரர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இதன்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் ரப்பர் குண்டுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை, தன்னை கலந்தாலோசிக்காமல், பாதுகாப்பு படையை நிறுத்தியமை மற்றும் அவர்களை கொண்டு போராட்டங்களை ஒடுக்குவது இறையாண்மைக்கு எதிரானது என தெரிவித்த கலிபோர்னியாவின் ஆளுநர் நியூசம், நாடு தற்போது சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றது என கவலையும் வெளியிட்டுள்ளார்.
போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
உலகில் அதிக எண்ணிக்கையிலான குடியேற்றவாசிகள் வசிக்கும் நாடு அமெரிக்கா. அவ்வாறிருக்கையில் அந்நாட்டில் குடியேற்றத்தின் பங்கு மிகவும் அளப்பறியது.
ட்ரம்பின் இந்த நடவடிக்கை நாட்டின் தொழில்துறை, பொருளாதாரம், மக்கள் தொகை, ஆராய்ச்சி, நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் பெரும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
2023ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களுக்கமைய அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடியேற்றவாசிகளின் பங்களிப்பு ஆண்டொன்றுக்கு $2 டிரில்லியன் ஆகும். அவர்கள் இல்லெயெனில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.6% முதல் 6.4% வரை குறைவடையும்.
இதேவேளை, உத்தியோகப் பிரிவில் 17 வீதமும் விவசாயம், கட்டுமானம் மற்றும் சுகாதார துறையில் 75 வீத பங்களிப்பை குடியேற்றவாசிகள் வழங்குகின்றனர்.
மக்கள் தொகை அதிகரிப்புக்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் 88% வளர்ச்சிக்கு காரணமாக உள்ளனர்.
அமெரிக்காவின் பல்வேறு உணவுகள், மொழிகள், இசை மற்றும் வாழ்க்கை முறைகள் குடியாளர்களால் ஏற்பட்ட மாற்றம் இவர்கள் இல்லையெனில், அமெரிக்கா ஒரு சுருங்கிய கலாச்சார நாடாக மாறும்.
குடியாளர்கள் அவர்கள் பெற்ற நலத்திட்டங்களை விட அதிகம் வரி செலுத்துகின்றனர். ஆகவே அமெரிக்காவின் வளர்ச்சிக்கு குடியேற்றவாசிகளே அடித்தளம் எனலாம்.
பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கிராமப்புறங்களில் குடியேற்றங்கள் அதிகரிக்க வேண்டும் என சில பொருளாதார நிபுணர்கள் மற்றும் குடியேற்றத்தை ஆதரிக்கும் நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
மேலும் ட்ரம்ப் நிர்வாகம் சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என்பதிலும் சந்தேகமில்லை. குடியேறிகளை நாடு கடத்தும் பணி அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த நடைமுறையின் முதல் படி ஆவணங்களற்ற குடியேறிகளை கண்டுபிடித்து கைது செய்வது.
பின்னர் சிறையில் அடைப்பதற்கு மாற்றான முறையில் அவர்களை ஓரிடத்தில் தங்க வைக்க வேண்டும். பிறகு அவர்கள் குடியேற்ற நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். இந்த நீதிமன்றங்களில் பல வழக்குகள் ஆண்டுக் கணக்கில் நிலுவையிலும் உள்ளன .
அவர்களது சொந்த நாட்டில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்களா என்பதை உறுதி செய்ய, தூதரக மட்டத்தில் ஒத்துழைப்பும் இதற்குத் தேவைப்படுகிறது.
பாலகணேஷ் டிலுக்ஷா