திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி வெளியுறவு அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா உட்பட அந்தக் கட்சியின் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சி கோரியுள்ளது.
இது குறித்து தமிழரசு கட்சியின் பொது செயலாளர் சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது.
நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள்.
ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.
தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.
அக்கட்சியை சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.
