விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்ப்படும் – டிரம்ப் அறிவிப்பு

இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூர்ந்து, அடுத்த பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் இருக்கலாம் என்று கூறினார்.
“எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நேற்று சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களைச் செய்கிறோம்.
விரைவில் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் வரப்போகிறது. அது மிகப் பெரியது. நாங்கள் இந்திய சந்தைகளைத் திறக்கிறோம்” என்று டிரம்ப் கூறினார்.
இதையும் படியுங்கள்: அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேசுவார்த்தையும் கிடையாது – ஈரான் திட்டவட்டம்
சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அதிகாரிகளும், வர்த்தக அமைச்சகத்தின் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை தற்போதைய 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.