
குஜராத் மாநில வரலாற்றில் புனித சின்னங்கள் வெளிநாட்டிற்கு எடுத்து செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்
இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு நேற்று (05) இடம்பெற்றதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ், குஜராத் மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த புனித ஸ்ரீ சர்வக்ஞ சின்னங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குஜராத் மாநில வரலாற்றில், புனித ஸ்ரீ சர்வக்ஞ சின்னங்கள் வெளிநாடு ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையானது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் வரலாற்று ரீதியான உறவை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தாதுக்கள் வழிபாட்டை ஏற்பாடு செய்வதற்கு குஜராத் மாநில அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். இது இலங்கைக்கும் குஜராத்திற்கும் இடையிலான நீண்டகால மத மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலின் போது, இந்தியாவின் முன்னணி கைத்தொழில் மையமான குஜராத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர்.
அதற்கமைய, அமுல் மற்றும் டாடா போன்ற குஜராத்தின் முன்னணி நிறுவனங்களுடன் நிலவும் கைத்தொழில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இரு நாட்டு பௌத்த மக்களுக்கிடையிலான கலாசார பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் புதிய ஊக்குவிப்பு வாய்ப்புகள் குறித்துச் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

