பொலிஸ் ஆணைக்குழு, ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் இடையே பிரச்சினை – ரஞ்சித் மத்தும பண்டார

பொலிஸ் ஆணைக்குழு, ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இடையே பிரச்சினையொன்று எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சூழலின் கீழ் இந்நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் வேறு என்ன பேச்சு எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ திருட்டு, மோசடி, ஊழலை ஒழிப்பதாகவும், திருடர்களை தண்டிப்பதாகவும் கூறி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
திருடப்பட்ட சொத்துக்களும், பணமும் மீட்கப்படும் என்று மேடைகளில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ள முடியுமான ஒரு சட்டமூலத்தை அன்றே எங்களால் கொண்டு வர முடிந்தது.
அரசாங்கத்தின் ஆயுட்காலத்தில் பத்து வீதம் இப்போது கடந்துவிட்டது. அவ்வாறான ஒரு சட்டமூலத்தை கூட அமுல்படுத்த முடியவில்லை.
திருடர்களைப் பிடியுங்கள். நாங்கள் அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்குவோம்.
தாஜுதீன் கொலை விசாரணையை தவறாக வழிநடத்திய ஒரு அதிகாரி, பொது பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.
அப்படியானால் இந்த விசாரணைகளில் நாம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?” என கேள்வியெழுப்பினார்.