நுவரெலியா பிரதேச சபையும் இ.தொ.கா வசமானது

நுவரெலியா பிரதேச சபையும் இ.தொ.கா வசமானது

நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று நுவரெலியா பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் வேலு யோகராஜ், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேவகே ஆஷா தில்ருக்ஷி பொன்சேகா சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நுவரெலியா பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிஸ் சார்பாக வேலு யோகராஜின் பெயர் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் வேலு யோகராஜ் சபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் நடுநிலை வகித்தார்.

உப தலைவர் தெரிவிற்காக மூன்று பேர் போட்டியிட்டனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஹேவகே ஆஷா தில்ருக்ஷி பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக எம்.கே. சரத் குமார சிங்க பத்மசிறி மற்றும் ஜெயகுமார் ஜெயசங்கர் ஆகியோர் போட்டியிட்டனர். இதன்போது, திறந்த முறை வாக்கெடுப்புக்கு 13 வாக்குகள் கிடைக்கப்பெற்றதனால், திறந்த முறை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட ஹேவகே ஆஷா தில்ருக்ஷி 13 வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர். இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான எம்.கே. சரத் குமார சிங்க பத்மசிறி 4 வாக்குகளையும், ஜெயகுமார் ஜெயசங்கர் 5 வாக்குகளையும் பெற்றுக்கொண்டார். இதன்போது, மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும், நடுநிலை வகித்தனர்.

1. நுவரெலியா பிரதேச சபை 24 உறுப்பினர்களை கொண்டது.

• தேசிய மக்கள் சக்தி – 07

• ஐக்கிய மக்கள் சக்தி – 05

• ஐக்கிய தேசியக் கட்சி – 01

• சுயேட்சை – 02

• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 06

• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 01

• மக்கள் போராட்ட முன்னணி – 01

• ஜனநாயக தேசிய கூட்டமைப்பு – 01

Share This