சபையில் அரசாங்கத்திடம் தொடர் கேள்விகளை தொடுத்த எதிர்க்கட்சி தலைவர்

அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் வார்த்தைக்கு ஆடுகிறதா என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.
025 நிதி நிலை அறிக்கை குழுநிலை விவாதத்தின் நான்காம் நாளான இன்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
அனைத்து வரிகளையும் நீக்கி சலுகை விலையில் நாட்டு மக்களுக்கு எரிபொருளை வழங்குவதாக ஜனாதிபதி நாட்டுக்கே அறிவிக்கிறார், ஏன் இது நிறைவேற்றப்படவில்லை? நிறைவேற்றாததற்கான காரணம் என்ன? பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எரிசக்தி அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கிறேன் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கருத்து வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,
“நான் எரிசக்தி அமைச்சரிடம் சில இலகு கேள்விகளை முன்வைக்கிறேன். அவற்றுக்கு திட்டவட்டமான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திலும் பொதுத் தேர்தலிலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான திசைகாட்டி கட்சியும், மக்கள் விடுதலை முன்னணிக் குழுக்களும் மிகத் தெளிவாக எரிபொருள் விலையை கணிசமான அளவில் குறைப்பதாக அறிவித்தனர். அவர்கள் எரிபொருள் விலையைக் குறைக்க முடியும் என்பதற்கான காரணங்களையும் கூறினார்கள்.
தற்போதைய ஜனாதிபதி கூறியதன்படி, எரிபொருள் விலையைக் குறைக்க முடியும். எரிபொருளுக்கு ரூபாய் 50 வரி விதிப்பதோடு மட்டுமல்லாமல் பல வரிகள் உள்ளன. எரிபொருள் நிறுவனத்தின் கடன்கள் திறைசேரிக்கு மாற்றப்பட்டன. இப்போது எரிபொருள் நிறுவனத்திற்கு கடன் இல்லை. இப்போது ஒவ்வொரு லீட்டருக்கும் ரூபாய் 50 வரி விதிக்கப்படுகிறது, திறைசேரி கடனுக்கு ஈடாக இவை ஜனாதிபதியின் நேரடி வார்த்தைகள். அனைத்து வரிகளையும் நீக்கி சலுகை விலையில் நாட்டு மக்களுக்கு எரிபொருளை வழங்குவதாக ஜனாதிபதி நாட்டுக்கே அறிவிக்கிறார், இந்த நாட்டு மக்கள் தேர்தல் மேடையில் ஜனாதிபதி செய்த அறிவிப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வரை காத்திருக்கிறார்கள். இவ்வாறு அறிவித்திருந்தால், ஏன் இது நிறைவேற்றப்படவில்லை? நிறைவேற்றாததற்கான காரணம் என்ன? பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எரிசக்தி அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
அதேபோல், தற்போதைய ஜனாதிபதி மேடைகளில் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறுகிறார். ரூபாய் 9,000 கட்டணத்தை ரூபாய் 6,000 வரை குறைப்பதாகவும், ரூபாய் 3,000 கட்டணத்தை ரூபாய் 2,000 வரை குறைப்பதாகவும் கூறினார். மின்சாரக் கட்டணத்தை 33 வீதமாக குறைப்பதாகக் கூறினார்.
தற்போது 20 வீதமாக மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நான் அதை ஏற்கிறேன். ஆனால் அந்தக் கட்டணக் குறைப்பு அரசாங்கத்தின் தேவைக்காக அல்ல. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் மூலம் நாட்டின் சிவில் சமூகம் பெரும் போராட்டம் நடத்தி, அதன் விளைவாக மின்சார சபை பெறும் இலாபத்தை நுகர்வோர் சமூகத்திற்கு வழக்கமாக 20 வீத கட்டணக் குறைப்பாக வழங்கியது. மீதமுள்ள 13 வீதம் ஏன் குறைக்கப்படவில்லை என்று மின்சக்தி அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன்.
நாட்டின் அனைத்து மின்சார நுகர்வோருக்கும் மீதமுள்ள 13 வீத சலுகையை குறைந்த மின்சாரக் கட்டணம் மூலம் எப்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்க விரும்புகிறேன்.
அதேபோல், இந்த சபையில் முழு நாட்டையும் பாதித்த எரிசக்தி நெருக்கடி உருவாக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது. அது ஒரு குரங்கினால் நடந்ததா அல்லது சூரிய சக்தி தொடர்பான எழுந்ததா எரிசக்தி கட்டமைப்பில் தீர்வு வழங்க முடியாததால் இவை நடந்ததா என்ற விவாதமும் எழுந்தது.
நான் அமைச்சருக்கு ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். உலகின் முக்கிய செய்தியாக இருந்தது, ஒரு குரங்கினால் மின்சார அமைப்பு முறிந்து விழுந்தது என்பதே. சர்வதேச ஊடகங்கள் இது குறித்து அறிக்கையிட்டன. ஒரு குரங்கினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று உலகம் முழுவதும் அறிக்கையிடும்போது, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்குமா, நாட்டுக்கு வளங்களைக் கொண்டு வர காத்திருக்கும் குழுக்கள் அந்தப் பணத்தைக் கொண்டு வருவார்களா? சபையில் விவாதிக்கப்பட்டபடி, பிரச்சினை எழும்போது, அதற்கு தெளிவான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பதில்களை வழங்க நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.
அதை நிறைவேற்றாவிட்டால், மின்சார நுகர்வோர் சமூகத்திற்கு அசௌகரியம் ஏற்படுவதோடு, முழு நாட்டின் மக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், நாடு எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைய இந்த நாட்டுக்குத் தேவையான நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது.
2028 ஆம் ஆண்டளவில் கடனைத் திருப்பிச் செலுத்த எங்களுக்கு ஒரு பொருளாதார வளர்ச்சி இலக்கு உள்ளது. அது மட்டுமல்ல, அரச வருவாய் இலக்கும் உள்ளது. இவற்றை நிறைவேற்ற முடியாவிட்டால், எமது நாடு கடுமையான பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே, சுருக்கமாக, எரிபொருள் மீதான வரிகளை நீக்கி, நாட்டின் நுகர்வோருக்கு எரிபொருள் விலையைக் குறைத்து வழங்கி, மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு எப்போது குறைப்பீர்கள் என்று கேட்க விரும்புகிறேன்.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள விலை சூத்திரங்களை அரசாங்கம் அங்கீகரிக்கிறதா? மேடைகளில் இந்த விலை சூத்திரங்கள் தவறானவை என்பதால் அவற்றை மாற்றுவதாகக் கூறப்பட்டது. புதிய சூத்திரம் என்ன, அல்லது அரசாங்கம் இன்னும் சர்வதேச நாணய நிதியம் சொல்லும் வார்த்தைக்கு ஆடுகிறதா என்று கேட்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.