பொருளாதாரத்தில் போரின் தாக்கம் ஒரே இரவில் முடிந்துவிடாது – நளிந்த

பொருளாதாரத்தில் போரின் தாக்கம் ஒரே இரவில் முடிந்துவிடாது – நளிந்த

எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார் .

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மார்ச் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் 37 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது. உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்பு உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதும் பாரிய நட்டத்திலேயே செயற்பட்டு வருகிறது. நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மத்தியிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 20 பில்லியன் ரூபாவைச் செலவிடவேண்டியுள்ளது. இந்த முழுச் சுமையையும் அரசாங்கம் ஏற்க நேர்ந்தால், ஆண்டுக்கு கூடுதலாக $1.5 பில்லியன் செலவுச் சுமையை அரசாங்கம் ஏற்க வேண்டியிருக்கும். அவ்வாறு நடந்தால் எண்ணெய் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.

ஏப்ரல் மாதத்தில் வரவிருந்த 30,000 டொன் கச்சா எண்ணெய் கப்பல் நாட்டிற்கு வராது, அதற்கு பதிலாக ஜூன் மாதத்தில் 30,000 டொன் கச்சா எண்ணெய் கப்பல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரை யாராலும் கணிக்க முடியாது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் அல்லது அண்டை நாடுகளுக்கு ஓரிரு வாரங்களில் போர் முடிந்துவிடுமா என்று சொல்ல முடியாது. போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்பதே எங்கள் நம்பிக்கை.

போர் நாளை முடிந்தாலும், குறிப்பாக பொருளாதாரம், எண்ணெய் உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ​​நமது பொருளாதாரத்தில் போரின் தாக்கம் ஒரே இரவில் முடிந்துவிடாது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு நாடாக நாம் நிச்சயமாக எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், இதற்கு தீர்வாகவே QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அனைவரும் இதை உணர்வுபூர்வமாக சிந்தித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் , எரிசக்தி நுகர்வைக் குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து அமைச்சகச் செயலாளர்களுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )