குற்றமிழைத்தவர்களே ஷானி அபேசேகரவை கண்டு அஞ்சுகின்றனர்

” குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தரப்பினருக்கே சிஐடியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளமை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது ஜே.வி.பி. தலைமையகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய ஷானி அபேசேகர சிஐடி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என மொட்டு கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் கருத்து தொடர்பில் வினப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,
” இன்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரே, ஷானி அபேசேகரவின் விசாரணை நடவடிக்கைகளை முடக்கி, அவரின் தொழிற்சார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.
ஷானி அபேசேகர திறமையான அதிகாரி, எனவே, ஷானி அபேசேகர யாரென்பது மக்களுக்கு தெரியும். நாட்டுக்காக உயிரைக்கூட துச்சமெனக் கருதி செயற்படும் அதிகாரியை நாம் பாதுகாப்போம்.
குற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது தமக்கு பிரச்சினை வரும் எனக் கருதும் தரப்பினரே இப்படியான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ” – என்றார்.