தலவாக்கலை லிந்துலை நகர சபை தேசிய மக்கள் சக்தி வசம் – இ.தொ.கா ஆதரவு

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று மாலை 3.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மலிதுவ லியனகே உபாலி, திறந்த வாக்கெடுப்பு மூலம் நகர சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ரொசான் இராஜசேகர் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக மலிதுவ லியனகே உபாலி, மலையக மக்கள் முன்னணி சார்பாக தாளமுத்து சுதாகர் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.
திறந்த வாக்கெடுப்பிற்கு 6 வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இரகசிய வாக்கெடுப்பிற்கு 5 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தது. இதில் ஆறு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட மலிதுவ லியனகே உபாலி தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் தாளமுத்து சுதாகர் 05 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் நடுநிலை வகித்தார்.
உப தலைவர் தெரிவு செய்வதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ரொசான் இராஜசேகர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பஹல விதானகே இஷார அனுருத்த மஞ்சநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ரொசான் இராஜசேகர் 06 வாக்குகளை பெற்று உப தலைவராக தெரிவானர். இவருக்கு எதிராக போட்டியிட்ட பஹல விதானகே இஷார அனுருத்த மஞ்சநாயக்க 05 வாக்குகளே வாக்குகளே பெற்றுக்கொண்டார்.
1. தலவாக்கலை லிந்துலை நகர 12 உறுப்பினர்களை கொண்டது.
• தேசிய மக்கள் சக்தி – 04
• ஐக்கிய மக்கள் சக்தி – 02
• மலையக மக்கள் முன்னணி – 03
• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 01