
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி புதுச்சேரி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
எதிர்வரும் ஒன்பதாம் திகதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கு என தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதுச்சேரி பொலிஸார் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
இதன்படி, தமிழக வெற்றிக் கழகம் வழங்கு கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வரும் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதி அட்டை இல்லாத எவருக்கும் கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்த முடியாது எனவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர காலங்களில் வெளியேறும் வழி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாநாட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி புதுச்சேரி மாநாட்டிற்கு இவ்வாறு அனுமதி மறுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
