ஆங்கிலேயரின் கலாசாரத்தை நாகரீகமாக கருதியதால் தமிழ் கலாசாரம் அழிவுகளை சந்தித்தது – செந்தில் தொண்டமான்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டில் தமிழ் கலாசாரம் குறித்து செந்தில் தொண்டமான் உரையாற்றினார்.
அம்மா, அப்பா என்பது தான் ஒரு குழந்தை தனது வாழ்நாளில் முதலில் சொல்ல ஆரம்பிக்கும் வார்த்தை. ஆனால், அந்த வார்த்தைகள் மாறி மம்மி, டேடி என தமிழர்கள் வீட்டில் பாவிக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுதே தமிழ் கலாசாரம் சீர்குலைந்து ஆங்கிலேயர்களின் கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்தது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சி காலத்தில் கலாசார சீர்குலைவு என்பது மொழியில் ஆரம்பித்து ஒவ்வொரு வீடுகளாக ஆட்கொள்ள தொடங்கியது.
ஆங்கிலேயரின் கலாசாரச்சை நாகரீகமாக கருத தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் ஒவ்வொரு தமிழ் கலாசார அழிவுகள் தொடர்ந்தும் இடம்பெற தொடங்கின.
அவ்வாறு இருக்கும் நிலையில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு தலைவர் பா.கு சண்முகம் அவர்கள் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்தல், சான்றோர்களை கௌரவித்தல், போன்ற நல்ல வேலைத்திட்டங்களை மலேசியாவில் முன்னுதாரணமாக செய்து வருகிறார். இந்நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும்,தொடர்ந்து தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களுடைய மிக முக்கியமான பொறுப்பு எனவும் செந்தில் தொண்டமான் தனது உரையில் தெரிவித்தார்.