ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரிடம் மலையக மக்களின் நில உரிமைகள், பொருளாதார சுதந்திரம் மற்றும் நிர்வாக பாகுபாடு குறித்த அறிக்கை கையளிப்பு

மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. , ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க்கை நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சந்தித்து, மலையகத் தமிழர் சமூகத்தின் வரலாற்று பாரபட்சங்கள் மற்றும் தொடரும் சமூக, பொருளாதார புறக்கணிப்புகளை வலியுறுத்தியிருந்தார்.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) சார்பில், அதன் சர்வதேச விவகாரங்களுக்கான உப தலைவர் பாரத் அருள்சாமி , உயர் ஆணையரை அவரது அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் நேரில் சந்தித்து, ஒரு விரிவான உரிமைகள் அடிப்படையிலான அறிக்கையை கையளித்தார். இந்த அறிக்கை மலையக மக்களின் நில உரிமை, அடிப்படை வசதிகள், சுகாதார அணுகல், நிர்வாக பாகுபாடு மற்றும் சீர்திருத்த தேவைகளை வலியுறுத்துகிறது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
நிலமின்மை மற்றும் உறையுளுக்கான அனுமதி மறுப்பு குடியிருப்புகள்
தலைமுறை தலைமுறையாகச் செயல்பட்டும் நில உரிமை மறுக்கப்படுகிறது. இது ICESCR பிரிவு 11 மற்றும் CERD பிரிவு 5(e)(iii) ஆகியவற்றை மீறுகிறது.
பொருளாதார சுதந்திரமின்மை
தொழிலாளர்கள் சார்பு ஊதியத்தில் சிக்கி மேலோங்க முடியாமல் இருக்கின்றனர். இது ILO மாநாடு எண். 110, ICESCR பிரிவு 7 மற்றும் SDG 8-ஐ மீறுகிறது.
மருத்துவ சேவைகளின் இடைஞ்சல்
தோட்ட மருத்துவ மையங்கள் அரசின் பேணல் இல்லாமையால் செயலிழந்துள்ளன. இது ICESCR பிரிவு 12 மற்றும் ILO தொழிலாளர் நல தரங்களை மீறுகிறது.
நிர்வாக பாகுபாடு
ஒரு கிராம சேவகர் அதிகாரி 3,000 பேர் மேல் பொறுப்பேற்கும் சூழல் காணப்படுகிறது, இது ICCPR பிரிவு 25(c)-இற்கு முரணாகும்.
“இது தொழிலாளர்களுக்கான கேள்வி மட்டுமல்ல – இது ஒரு கட்டமைப்பு அடிப்படையிலான மனித உரிமை கேள்வி”
அறிக்கை வழங்கிய பின்னர் பேசிய பரத் அருள்சாமி கூறியதாவது:
“நமது மக்கள் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொருளாதாரத்தை தூக்கினர். ஆனால் அவர்கள் இன்னமும் நிலமற்றவர்களாகவும், நிர்வாக புறக்கணிப்புக்குள்ளாகவும் இருக்கின்றனர். இது வளர்ச்சி பற்றிய விவாதம் அல்ல. இது திட்டமிட்ட ஒடுக்குமுறையைப் பற்றிய மனித உரிமை விவாதம்.”
சமகால அடிமைத்தனம் மற்றும் கட்டமைப்பு ஒடுக்குமுறை
அறிக்கையில், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் மேற்கோளுடன், சமூகங்களை கட்டமைப்பாக விலக்குவது சமகால அடிமைத்தனம், இன பாகுபாடு, மற்றும் நிறவெறி ஆக கருதப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடவடிக்கை
DPF-TPA இன் சார்பில், ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், OHCHR, மற்றும் பிற மனித உரிமை நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி, இந்த அறிக்கையின் பின்விளைவுகளை கண்காணிப்பதற்கும், சட்டமன்ற சீர்திருத்தங்கள், நில உரிமை மற்றும் நிர்வாக பாகுபாடுகளைத் திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரத் அருள்சாமி உறுதி தெரிவித்தார்.