இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை

இலங்கைக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை

இலங்கைக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘ ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. எனவே, மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்தது நல்லது. அவருக்கும் அறிக்கை முன்வைப்பதற்கு அது இலகுவானதாக இருக்கும். ஏனெனில் அவரால் விடயங்களை நேரில் அவதானிக்க முடிந்தது. நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டியுள்ளோம்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார பாகுபாட்டை நிவர்த்தி செய்தல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு காணமுடிந்தது. நாம் எதையும் ஒளிக்கவில்லை. வெளிப்படை தன்மையுடன்தான் நடவடிக்கை இடம்பெறும்.

செப்டம்பர் முதல் வாரமளவில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது பற்றிய வர்த்தமானியை வெளியிடுவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

Share This