
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு – 2,500 மேலதிக படையினர் கடமையில்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (15) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் விசேடமாக 2,500 மேலதிக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நகரங்களின் பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் தங்கள் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஏதேனும் ஒரு இடத்தில் நிறுத்தும போது அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பொது மக்கள் தங்களுடைய வாகனங்களில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
