யாழ். கடுகதி ரயில் சேவை குறித்து விசேட அறிவிப்பு

யாழ். கடுகதி ரயில் சேவை குறித்து விசேட அறிவிப்பு

யாழ்ப்பாணம் முதல் கல்கிசை வரையிலான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் தினசரி சேவையாக விரிவாக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்தார்.

நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் மற்றும் துறைசார் தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சேவை தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி முதல் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கொழும்பு கோட்டை நிலையத்தை காலை 5:45 மணிக்கு வந்தடைந்து, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும். இது யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை மதியம் 11:49 மணிக்கு வந்தடைந்து, பின்னர் காங்கேசன்துறையை மதியம் 12:13 மணிக்கு சென்றடையும்.

மீண்டும் மாலை 1:30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 2:12 மணிக்கு பயணத்தைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டையை இரவு 8:33 மணிக்கு வந்தடையும். பின்னர், கல்கிசையை இரவு 8:55 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகளை அடுத்த சில நாட்களில் ரயில்வே திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

மேலும், இதுவரை காலை 5:45 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்டு வந்த யாழ் தேவி ரயில், எதிர்வரும் 7ஆம் திகதி முதல் காலை 6:35 மணிக்கு புறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Share This