செம்மனி புதைகுழி ‘சட்டவிரோதமாக அல்லது இரகசியமாக’ உடல்கள் புதைக்கப்பட்ட இடம்

இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, சட்டவிரோதமாகவோ அல்லது இரகசியமாகவோ உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என அகழ்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இதுவரை ஆறு உடல்களின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, மேலும் எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள, யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி, மயானத்தை ஒரு மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (ஜூன் 6) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்தனர்.
மனித உடல்கள் அந்த இடத்தில் குழப்பமான சூழலில் அல்லது குழப்பமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இது அகழ்வினை வழிநடத்தும் இரண்டு முக்கிய அரச அதிகாரிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிட்டுள்ளார்.
“இந்த வழக்கில் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தொல்பொருள் தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் அவதானிப்பு அறிக்கைகளின் அடிப்படையில், மூன்று விதமான விடயங்கள் இருவராலும் முன்வைக்கப்பட்டது. முதலாவது விடயமாக குறிக்கப்பட்ட அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 மீற்றர் அடி அளவிலேயே மனித என்பு எச்சங்கள் அடையாளப்படுத்த கூடியதாக உள்ளது. குழப்பமான சூழலில் அல்லது குழப்பமான வகையில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை. இது சட்டவிரோதமான அல்லது இரகசியமான புதைகுழியாக இருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.”
அகழ்வினை வழிநடத்தும் நிபுணர்கள், வெகுஜன புதைகுழி தொடர்பான விசாரணைகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி ரணிதா, நிபுணர்கள் திருப்தி அடையும் வரை அகழ்வுப் பணிகளைத் தொடர யாழ்ப்பாண நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
“17 எலும்புக்கூடுகள் இதுவரை பகுதியளவிலும் முழுமையாகவும் அடையாளம் காணப்பட்டு 5 மனித எலும்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தொடர்ந்தும் பல மனித எச்சங்கள் பகுதியளவில் அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இந்த மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை பேராசிரியர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணியாலும் அகழ்வை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், நிபுணர்கள், அகழ்வு நடவடிக்கையில் திருப்திபடும் வரையில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கபடவேண்டுமென கட்டளையிட்டது.”
40 நாட்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குத் தேவையான செயல்முறையை விரைவாக மேற்கொள்ளுமாறு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையில் செம்மனியாவில் உள்ள சித்துபாத்தி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுபு் பணிகள் இன்றைய தினம் (ஜூன் 6) ஐந்தாவது நாளாகத் தொடர்ந்தன.