வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்

வரலாறு படைத்தார் ஷுபன்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது டிராகன் விண்கலம்

இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்களுடன் பயணித்த ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார் ஷுபன்ஷு சுக்லா.

புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இந்திய நேரப்படி 12:01-க்கு ஏவப்பட்ட ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் டிராகன் விண்கலம், தனது 28 மணி நேர பயணத்தை நிறைவு செய்து இன்று இந்திய நேரப்படி மாலை 4:01 மணியளவில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து 424 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

நாசாவின் நேரடி வீடியோ இணைப்பு, டிராகன் விண்கலமானது விண்வெளி நிலையத்தை நெருங்குவதைக் காட்டியது மற்றும் டாக்கிங் (docking) பணி மாலை 4:15 மணிக்கு நிறைவடைந்தது. டிராகன் விண்கலம் தரையிறங்கியவுடன், இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

ஷுபன்ஷு சுக்லா யார்? – அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது. இதற்கு இஸ்ரோ சார்பில் செல்ல ககன்யான் திட்டத்துக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை பைலட்களில் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்தவர் ஷுபன்ஷு சுக்லா. கடந்த 1985-ம் ஆண்டு பிறந்த இவர், 2006-ல் இந்திய விமானப்படையில் பைலட்டாக சேர்ந்தார். 2019-ம் ஆண்டு விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்துக்கு இவர் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்.

ஷுபன்ஷு சுக்லாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் பெக்கி விட்சன் (கமாண்டர்) , போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் விண்வெளி மையம் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்ட டிராகன் விண்கலம், ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று மதியம் 12.01 மணிக்கு அனுப்பப்பட்டது. இவர்களது பயணம் இந்த மாதத்தில் மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவு போன்ற காரணங்களால் 3 முறை ஒத்திபோடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி பயணத்துக்கு முன் சுக்லா அளித்த பேட்டியில், ‘‘நான் விண்வெளிக்கு ஆய்வு உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை கொண்டு செல்கிறேன்’’ என்றார்.

60 ஆய்வுகள்: சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள இந்தக் குழுவினர், இஸ்ரோவின் 7 அறிவியல் சோதனைகளுடன் சுமார் 60 பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் 2 வாரம் காலம் தங்கியிருக்கும் இந்தக் குழுவினர் ஆய்வுகளை முடித்துவிட்டு டிராகன் விண்கலத்தில் பூமி திரும்புவர்.

41 ஆண்டுகளுக்குப் பின்: விண்வெளி பயணம் மேற்காண்ட முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். அதன்பின் 41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்தியர் ஷுபன்ஷு சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராகேஷ் சர்மாவின் நினைவாக ஒரு பொருளையும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதை விண்வெளி பயணத்தை முடித்து பூமி திரும்பியபின் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Share This