நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு – 14 பேர் பலி

நேபாளத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதள ஆப்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில், நேபாளத்தில் இந்த ஜென் Z தலைமுறையினர், இன்று மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில், தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரஹி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் பொலிஸாரை திக்குமுக்காட வைத்தனர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்ல போலீஸ் தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை நடத்தியுள்ளனர். இதில், இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை எப்போது, ஏன்?: கடந்த 4-ம் திகதி முதலே நேபாளத்தில் சமூக வலைதள தடை அமலில் உள்ளது. ஆனால், அதற்கெதிராக அமைதிவழி போராட்டங்கள் பல நடந்தும் கூட அரசு சற்றும் இரக்கம் காட்டாத நிலையில்தான் இன்று போராட்டம் இவ்வளவு பெரிதாக வெடித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகின்றனர்.
நேபாள தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்வி சுபா குருங் கூறுகையில், “பல்வேறு சமூக வலைதளங்களுக்கும் வரி விதிப்பு பற்றி பலமுறை விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 17-ம் திகதி உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் அரசு வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்கள் பதிவு செய்துகொண்டு சில வரி விதிப்புகளுக்கு உட்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்று தெரிவித்துவிட்டது. இருப்பினும் அவர்கள் உடன்படாததால் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது நேபாளத்தில் Viber, TikTok, Wetalk, Nimbuzz போன்ற சமூக வலைதளங்களை மக்கள் பயன்படுத்த முடிகிறது. இவை பதிவு செய்துவிட்டன. டெலிகிராம் பதிவு செய்யும் நடவடிக்கையில் உள்ளது. ஆனால் ஃபேஸ்புக், மெட்டா, வாட்ஸ் அப் எல்லாம் பதிவு செய்வதற்கே இன்னும் முன்வரவில்லை. போதிய அவகாசம் கொடுத்தும் அவர்கள் தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லாததால் தான் தடை செய்யப்பட்டது” என்று கூறுகிறார்.
சோஷியல் மீடியா தடையா, ஊழல் எதிர்ப்பா? – மேலோட்டமாக பார்த்தால், ஜென் z தலைமுறையினரின் இந்த பிரம்மாண்ட போராட்டத்துக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட 26 பிரபல சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது காரணமாகச் சொல்லப்படுகிறது.
நேபாளத்தின் பிரதமராக அந்நாட்டின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி. சர்மா ஒலி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். அண்மையில் அவரது அரசு, பிரபல சமூக வலைதளங்கள் பலவும் நேபாள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்யாவிட்டால் அவற்றிற்கு தடை விதிக்கப்படும் என்றது. நாட்டின் பாதுகாப்புக்காக அவை பதிவு செய்வதுடன், வரியும் செலுத்த வேண்டும் என்றது. இதற்கு எதிர்பு கிளம்ப, உச்ச நீதிமன்றம் வரை சென்று தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது அரசு. இந்நிலையில்தான் சமூக வலைதளங்கள் பலவற்றுக்கும் 4-ம் தேதி முதல் தடை நிலவுகிறது.
ஆனால், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், இது பாதுகாப்பு காரணங்களுக்காக தடை என்பதைத் தாண்டி அரசாங்கத்தில் ஊழலை எதிர்ப்போர், பேசுவோரை மட்டுப்படுத்தும் முயற்சி என்று விமர்சிக்கின்றனர். நேபாள இளைஞர்கள் பலரும் ஆட்சியின் அவலத்தை சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்துகின்றனர். அதனை ஒடுக்கவே இந்தத் தடை என்கின்றனர்.
போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் அளித்த ஊடகப் பேட்டிகளில், “நாங்கள் எந்த ஓர் அரசியல் கட்சிக்கு எதிராகவும் அல்லது எந்தவொரு குழுவின் உந்துதலாலும் திரளவில்லை. மாறாக ஊழல் எதிர்ப்பு, சமூக வலைதள பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு, வாரிசு அரசியல், பாரபட்ச அரசியலுக்கு எதிர்ப்பு போன்ற காரணங்களுக்காக தன்னெழுச்சியாகத் திரண்டுள்ளோம்” என்றனர்.
அதை உறுதிப்படுத்துவது போல், 24 வயதான யுஜான் ராஜ்பந்தாரி என்ற மாணவர் கூறுகையில், “சமூக வலைதளத் தடை நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்த உந்துசக்தியாக இருந்துள்ளது. மற்றபடி நாங்கள் அதற்காக மட்டுமே இங்கே திரளவில்லை” என்றார்.
நேபாள அரசின் உத்தரவுப்படி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூடியூப், ரெட்டிட், ஸ்நாப்சாட் என்று பலராலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டிருந்தாலும் கூட இத்தனை பெரிய கூட்டம் எப்படி சாத்தியமானது என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு போராட்டக்காரர்கள் விபிஎன், டிஎன்எஸ் மூலம் இணைய இணைப்பை உருவாக்கி தகவலை பரிமாறிக் கொண்டோம் என்கின்றனர். இந்த விளக்கம்தான், சமூக வலைதள தடையையும் தாண்டி இவர்கள் போராட்டப் பின்னணியில் வேறு சில பிரச்சினைகளும் இருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் மூலமும் இளைஞர்கள் நாடாளுமன்றம் அருகே திரண்டுள்ளனர். இத்தனை மெனக்கிடல்கள் வெறும் சோஷியல் மீடியா தடைக்காக இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். போராட்டக் காரர்களை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது பத்தாது என்று கலவரக்காரர்கள் கண்டதும் சுடுங்கள் என்றும் நேபாள அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் காத்மாண்டு மேயரான பலேந்திரா ஷா, ஜென் z போராட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். 2022 உள்ளாட்சித் தேர்தலில், முழுக்க முழுக்க ஆன்லைன் பிரச்சாரம் மூலம் கவனம் ஈர்த்து வெற்றி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டம் குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “வயது மூப்பின் காரணமாக நான் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடியாது. ஆனால், போராட்டத்துக்கு எனது முழு ஆதரவு உண்டு” எனத் தெரிவித்துள்ளார். பலேந்திரா ஷா, மெயின்ஸ்ட்ரீம் அரசியல் கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஒரு சுயேட்சை என்பது குறிப்பிடத்தகது.
பிரதமரின் வாதம் என்ன? – நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் ஒலி, “குறிப்பிட்ட சில சமூக வலைதளங்களை நாம் தடை செய்துள்ளோம். அவை நமது விதிமுறைகளுக்கு உட்படவில்லை. அவற்றை தடை செய்திருப்பது தேச இறையாண்மையைப் பேண அவசியமானது. அதனால், சமூக வலைதள தடையால் எங்கேயோ 2 முதல் 4 பேர் வரை வேலை இழந்திருந்தால்; அதனால் ஒன்றும் பெரிய பிரச்சினையும், இழப்பும் இல்லை” என்று கூறியிருந்தார்.
நேபாள பிரதமரின் இந்தப் பேச்சு ஜென் z தலைமுறையினரை எரிச்சலூட்டியதாகக் கூறப்படுகிறது. உண்மையில், சமூக வலைதளத் தடையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜென் z டிஜிட்டல் படைப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஊரடங்கு அமல்: இதற்கிடையில், நேபாள நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுக்க, இன்று அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பானேஸ்வர், அதிபர் மாளிகையான ஷித்தால் நிவாஸ், துணை அதிபர் குடியிருப்பான லைன்சார், பிரதமர் இல்லம் அமைந்துள்ள பலுவாட்டார், அரசு வளாகங்கள் மிகுந்த ஷிங்கா தர்பார் ஆகிய பகுதிகளில் இன்று பகல் 1 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தியது காத்மாண்டு மாவட்ட நிர்வாகம்.
நாடாளுமன்றத்துக்கு செல்லவிடாமல் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் கூட இளைஞர்கள் போலீஸ் தடுப்பு வேலிகளை தகர்த்துவிட்டு முன்னேறிச் சென்றனர். அவர்கள் ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் ஒலி பதவி விலக வேண்டும், அவர் நேபாளத்தை விட்டே வெளியேற வேண்டும் என்பது அவர்களின் பிரதான முழக்கமாக உள்ளது.
நேபாள இளைஞர்கள் பல ஆண்டுகளாக தேக்கிவைத்த அழுத்தம் தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் ஆட்சி மாற்றம் தான் அடிக்கடி நிகழ்கிறதே தவிர அவர்கள் அளிக்கும் வளம் பெருக்கும், வளர்ச்சி ஏற்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் போன்ற வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேறவில்லை.
வெறும் 3 கோடி மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான நேபாளத்தில், பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவர்களில் பலரும் மலேசியாவில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கின்றனர். சிலர் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்குச் செல்கின்றனர். இவர்களில் சொற்பமானவர்கள் தான் உயர் கல்விக்காக அங்கு சென்றுள்ளனரே தவிர, பெரும்பாலானோர் வேலைக்காகவே சென்றுள்ளனர். ஒவ்வொரு நாளுமே சுமார் 2000 பேர் நேபாளத்தில் இருந்து வேலைவாய்ப்பு தேடி வெளியேறுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
தப்பித்தவறி நேபாளத்திலேயே இருந்துவிடலாம் என சில இளைஞர்கள் முடிவு செய்தால் அவர்களுக்கு சமூக வலைதளம் தான் வாழ்வாதாரமாகவே இருக்கிறது. அதனால் அதன் மீதான தடை அவர்களுக்கு விரக்தியையும், கோபத்தையும் கொடுத்துள்ளது. தங்களின் பொருளாதார, படைப்பாக்க சுதந்திரம் தடைபட்டதாக அவர்கள் உணர்கின்றனர். நல்ல வேலை இல்லாமல் சமூக வலைதளம் சார்ந்த வேலைகளில் இருக்க அரசாங்கத்தின் ஊழலே காரணம் என்று அவர்கள் நம்புகின்றனர். அதனால் போராட்டம் நடத்துகின்றனர்.
வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் இளைஞர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரச குடும்பத்தினர் பகட்டை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டுகின்றனர். இது ஜென் z தலைமுறையினரை மேலும் வெகுண்டெழச் செய்துள்ளது.
போராட்டக்காரர்கள் இது குறித்து கூறும்போது, “நாங்கள் வறுமையில் உள்ளோம். ஆனால், ஊழல் அரசியல்வாதிகள் தாங்கள் சுரண்டிய பணத்தில் தங்களின் வாரிசுகளுக்கு வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கை ஏற்படுத்தித் தருகின்றனர். கடும் உழைப்பின் மூலம் வருவாய் ஈட்டும் எங்கள் பெற்றோர் அல்லது நாங்கள் கட்டும் வரிப் பணம் ஏன் ஊழல் அரசியல்வாதிகளின் வாரிசுகளின் ஆடம்பரத்துக்காக செல்ல வேண்டும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த வாரம் இந்தோனேசியாவில் இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்து பொது மக்கள் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.