போலியான கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் நுழைய முயன்றவர் நாடுகடத்தப்பட்டார்

போலியான பிரேசிலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவரை இன்று (23) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 35 வயதான செனகல் நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
சந்தேகநபர் இன்று காலை 05.45 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
இதனையடுத்து, அவர் விமான நிலைய குடிவரவு கவுண்டருக்குச் சென்று தனது பிரேசிலிய கடவுச்சீட்் வழங்கினார்.
அங்கு பணிபுரியும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரி கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் அடைந்து, அனைத்து ஆவணங்களுடன் அவரை எல்லை கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளில் பிரேசிலிய கடவுச்சீட்டு போலியானது என்பது தெரியவந்தது.
பின்னர், அவர் கொண்டு வந்த பொருட்களை ஆய்வு செய்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவரது உண்மையான செனகல் கடவுச்சீட்டையும், நேபாளத்தின் காத்மாண்டுவுக்கான விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, செனகல் நாட்டைச் சேர்ந்தவரை, அவர் வந்த கத்தாரின் தோஹாவிற்கு நாடு கடத்துவதற்காக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
