வடக்கு, கிழக்கை கைவிட்ட அரசாங்கம் – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கை கைவிட்ட அரசாங்கம் – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் முழுமையாக கைவிட்டுள்ளதாகவும், வடக்கு -கிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் எந்த திட்டமும் அரசினால் முன்வைக்கப்படவில்லையெனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2030 இல் 8 பில்லியன் வருமானத்தை சுற்றுலாத்துறையிலிருந்து எதிர்பார்க்கிறீர்கள். அதற்கு 4 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.

ஆனால் உங்களது பாதீட்டில் சுற்றுலாத்துறை சார்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்கு எத்திட்டமும் இல்லை. சுற்றுலாவிற்கான உட்கட்டமைப்பு வசதிகள் அங்கில்லை. சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறையில் முதலீடுகள் இல்லை.

வடக்கில் சுற்றுலாவை மேம்படுத்த சந்தைப்படுத்தல் தொடர்பாக திட்டம் ஏதுமில்லை. ஆகையால் இவ்விடயம் பற்றி அதிக கவனமெடுத்து வடக்கு, கிழக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Share This