அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போரை நிறுத்த ரஷ்யாவுக்கு 50 நாள் காலக்கெடு விதித்தார் ட்ரம்ப். பின்னர் இதை 12 நாட்களாக குறைத்தார். இதுகுறித்து ரஷ்ய முன்னாள் அதிபரும் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் எக்ஸ் தளத்தில், “ட்ரம்பின் ஒவ்வொரு காலக்கெடுவும் போரை நோக்கி தள்ளும் நடவடிக்கை’’ என பதிவிட்டார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “டிமிட்ரி மெட்வதேவ் அத்துமீறி பேசி வருகிறார். எனவே, ரஷ்யா அருகே 2 அணுசக்தி நீர்மூழ்கிகளை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்’’ என பதிவிட்டிருந்தார். இதை அணு ஆயுதப் போருக்கான மிரட்டலாக கருதிய டிமிட்ரி மெட்வதேவ், ‘அமெரிக்காவின் எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் டெட் ஹேண்ட்’ நடவடிக்கையை தூண்ட வழிவகுக்கும். அதன் பிறகு பின்வாங்க மாட்டோம்’’ என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, டெட் ஹெண்ட் என்றால் என்ன என்று அனைவரும் இணையத்தில் தேட ஆரம்பித்து விட்டனர். அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இடையே பனிப்போர் நடைபெற்றது. அப்போது, அமெரிக்காவின் தாக்குதலில் தலைநகரமே அழிந்து, அதிபர், ராணுவ தளபதி உள்ளிட்டோர் இறந்துவிட்டாலும் தன்னிச்சையாக இயங்கி பதிலடி கொடுப்பதற்காக சோவியத் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டதுதான் டெட் ஹேண்ட்.
டெட் ஹேண்ட் என்பது 1980-களில் உருவாக்கப்பட்ட சோவியத் யூனியன் காலத்து அணு ஆயுத கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். எதிரி நாடுகள் அணு குண்டு வீசினால், அதனால் ஏற்படும் நில அதிர்வு, அணுக் கதிர்வீச்சு பற்றிய தகவல் அந்த அமைப்புக்கு கிடைக்கும்.
அதன் பிறகு தலைமை உத்தரவிட்டதும் குறிப்பிட்ட அந்த நாட்டின் மீது தனது தாக்குதலை நடத்தும். பொதுவாக அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே இருக்கும். இந்த நிலையில், எதிரி நாட்டின் அணுகுண்டு தாக்குதலில் ரஷ்யாவின் அதிபர் உட்பட முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டால், அங்கிருந்து உத்தரவு வராத நிலையில் அதை தானாக புரிந்துகொள்ளும்.
இதையடுத்து அதிபரின் உத்தரவு இல்லாமலேயே அதில் இருக்கும் ஏவுகணை தானாக வெளியில் வந்து ஆங்காங்கே பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளுக்கு தகவல் கொடுக்கும். பின்னர் அவை தானாக செயல்பட்டு, எந்த நாடு தாக்குதல் நடத்தியதோ அந்த நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தி துவம்சம் செய்துவிடும்.
சோவியத் யூனியன் உடைந்துவிட்டபோதிலும், இந்த டெட் ஹேண்ட் அமைப்பை ரஷ்யா நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து வைத்துள்ளது. இதை மனதில் வைத்துதான் மெட்வதேவ் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டெட் ஹேண்ட் அமைப்பு மிகவும் மோசமான அணு ஆயுதம் ஆகும்.
இது இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்புகளுடன் ஓரளவு ஒருங்கிணைக்கப்பட்டு வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படுவதாக கூறப்படுகிறது. மெட்வதேவின் சமீபத்திய கருத்துகள் இந்த அமைப்பு இன்னும் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.