அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2027 வரை நீடித்தார் ரொனால்டோ

போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கழகமான அல் நாசரில் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரொனால்டோ அந்த கழகத்துடன் புதிய இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஜுன் 30ஆம் திகதியுடன் அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில், தற்போது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ரொனால்டோ அல் நாசர் கழகத்தில் இருந்து இம்முறை வெளியேறுவார் என வதந்திகள் பரவிய நிலையில், அவர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறிய ரொனால்டோ அல் நாசரில் இணைந்தார். அந்த அணிக்காக இதுவரை 111 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 99 கோல்களை அடித்துள்ளார்.
நடந்து முடிந்த சவுதி புரோ லீக் சீசனில் அல் இட்டிஹாட் மற்றும் அல் ஹிலாலுக்கு அடுத்த இடத்தில் மூன்றாவது இடத்தை அல் நாசர் கழகம் பிடித்திருந்தது.
இந்நிலையில், “ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அதே ஆர்வம், அதே கனவு. ஒன்றாக வரலாற்றை உருவாக்குவோம்” என்று கிறிஸ்டியானோ தனது ஒப்பந்தத்தை புதுப்பித்த பிறகு சமூக ஊடகங்களில் எழுதினார்.