மன்னார் காற்றாலை மின்திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்

மன்னார் காற்றாலை மின்திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்

மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தி திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடுபதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (07) விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தின் போது மன்னார் காற்றாலை மின்திட்டத்தால் மன்னார் மாவட்ட மனித மற்றும் இயற்கை வாழிடங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. திட்டத்தின் ஆரம்ப பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மன்னார் மாவட்ட சிவில் பிரஜைகள் இதன்போது எடுத்துரைத்துள்ளனர்.

காற்றாலை மின்திட்டம் குறித்து சகல தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கும். அதுவரையில் இத்திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கும் மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்விடயம் குறித்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மின்திட்ட பணிகளுக்கான பொருத்தல் உபகரணங்களை தீவுக்குள் கொண்டு செல்லாமல் அவற்றை பிறிதொரு இடத்தில் பாதுகாப்பாக வைப்பற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share This