அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்

அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்

அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முறையைத் மீளாய்வு செய்து, அவசியமான முன்னுரிமைகள் மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு, அதனுடன் இணைந்ததாக அத்தியாவசிய தேவைக்கு இணங்க, மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்புக்களை அடையாளங் கண்டு, அதன்படி, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவிற்கு அந்தந்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்காக அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டு வந்து பின்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார்.

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000, பாதுகாப்பு அமைச்சில் 09, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519, மேல் மாகாண சபையில் 34, கிழக்கு மாகாண சபையில் 05, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வெற்றிடங்கள் என மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Share This