ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதான முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் மாத்திரமல்ல உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.
நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த கைது அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கைதின் பின்னர் இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியிருந்தார்.
இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.
அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னர் தெரிவாகியிருந்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், எவரும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.
ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எந்தவொரு அரசாங்கமும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க முற்பட்டதில்லை.
19ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட முன்னர், முன்னாள் ஜனாதிபதிகள், தாம் பதவி வகித்த காலத்தில் எடுத்த முடிவுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கு தொடரவோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தவோ முடியாதென்ற வகையில் சட்ட ஏற்பாடுகள் இருந்தன. அதனை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம்தான் 2016ஆம் ஆண்டு 19ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றியமைத்தது.
இந்தப் பின்புலத்தில்தான் முதல் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் கடந்தகால அரசாங்கங்களின் ஊழல், மோசடிகள் மற்றும் அரச நிதியை வீண் விரயம் செய்தமை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணத்தில் அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டதுடன், நேற்றைய தினம் 50 மூன்று சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், 1815ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் அரச தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இதனை பார்க்கின்றனர்.
கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னரான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 பெப்ரவரி 18 அன்று கைது செய்யப்பட்டிருந்தார். மெதமஹநுவர என்ற இடத்தில் தலைமறைவாக இருந்தபோது, பொதுமக்கள் குழுவினரால் அவர் கண்டறியப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன் விளைவாக கண்டி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்ட முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட முன்னர் காணப்பட்ட பிரதமர் பதவியை வகித்தவர்கள்கூட கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. அத்துடன், ஆங்கிலேயேர் ஆட்சியில் இருந்த ஆளுநர்கள்கூட கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.
இந்த சமகாலத்தில் ஒரு பேசுபொருளாக மாத்திரமின்றி, வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பதிவாக மாறியுள்ளது. மிஸ்டர் கிளீன் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2015ஆம் ஆண்டுமுதல் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வந்ததுடன், தற்பொது அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய இலுக்காக மாறியுள்ளது.