தனியார் பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

தனியார் பல்கலைக்கழக பட்டங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைந்த உயர்கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் தொடர்பில் கல்வி அமைச்சு முறையான ஆய்வை முன்னெடுத்துள்ளது.

இந்த நிறுவனங்களில் கல்வியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் தகுதிகள், குறிப்பாக இலங்கை ஆசிரியர் சேவையில் நியமனம் பெறுவதற்கான தகுதி மற்றும் பொருத்தப்பாடு தொடர்பாக சிக்கல்கள் எழுந்துள்ளன.

அண்மைய ஆசிரியர் நியமனங்கள் முந்தைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் சேவை விதிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வியியல் பட்டங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை தற்போது கல்வி அமைச்சின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கான நியமனங்கள் இந்த தர ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த சந்திப்பில் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கல்வி அமைச்சின் பதில் செயலாளர் அமல் எதிரிசூரிய உள்ளிட்ட மூத்த அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

Share This