
நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஜனாதிபதி கவனம்
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சீரற்ற காலநிலையால் கொத்மலை நீர்த்தேக்கம் தொடர்பாக நாட்டில் பரவலாகப் பேசப்படும் கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு கடந்த 27 ஆம் திகதி வரலாற்றில் மிக அதிகளவு நீர் கிடைத்ததாகவும், கொத்மலை அணையைப் பாதுகாக்கும் நோக்கில் வழமையான முறைப்படி அறிவியல் பூர்வமாக வான்கதவுகள் திறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
நுவரெலியா மாவட்டத்தில் 4700 ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 500 ஏக்கர் வயல் நிலங்கள் தவிர, ஏனைய நெல் வயல் நிலங்களில் பெரும்போகத்தில் பயிற்செய்கை மேற்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கான காரணங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி ஆராய்ந்தார்.
சட்டவிரோதக் கட்டிடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இதற்குத் தீர்வாக, கிரகரி வாவியின் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளை நீர்ப்பாசன திணைக்களத்திற்கு ஒப்படைக்கவும் பொருளாதார செயற்பாடுகளை நகர சபையின் கீழ் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
